Friday, November 12, 2010

கண்ணாடி தொட்டியில் கடல் மீன்கள்

வண்ணமிகு நிறங்கள்
கண்ணாடி கூண்டிற்குள்
தேர்ந்த கற்கள்
ஒளி மிகா வெளிச்சங்கள்...
வேளைக்கு உணவு...
இன்ன பிற வசதிகளுடன்
நீரில் கரையும் பிராண வாயு

பாதி வளைந்த பானையில்
வரைய இயலா
வண்ணக்கோடுகளாய்
வளைய வரும் வண்ணமீன்கள்
மேல்கீழாய், வலமிடமாய்
நீந்தி செல்கின்றன....

அவை
தன் மீது படிந்த
வண்ணங்களை - அதன்
நிழல் படிமங்களாகவே
எண்ணி நீந்துகின்றன...

கண்களில் எழும்
கேள்விக்குறிகளைத்
தவிர்க்க இயலாமல்
குனிந்த தலையுடன்
பார்க்கிறான்
அதனை ரசிப்பவன்...

இணை இழந்த
மீனின் அழுகையொலியால் எழும்
பக்ககச்சுவர்களின்
அதிர்வுகளையும் கேட்கிறான்...

மீனின் குறிக்கோளற்ற
நெடும்பயணச்சுற்றுப்பாதையும்
கூர்நோக்குகிறான்,
தெளிவாகவே....

ஆனால்,
இன்னும் அவனறிய
இயலவில்லை நீந்துதல்
அவற்றின் தொழில் அல்ல
இடையறா வாழ்க்கை போராட்டம் என்று!

Sunday, November 7, 2010

தனிமைகளின் கூட்டம்


குழந்தைகளின் கிறுக்கள்கள்
ஏதுமற்ற சுவர்.....

பார்வையாளர்கள் எவருமற்ற
விளையாட்டு அரங்கு....

பறவைகள் ஓசையற்ற
பூந்தோட்டம்....

ரசிக்க எவருமற்ற
மழைக்கால வானவில்....

நட்சத்திர கூட்டம்
இல்லாமல் போன வானம்...

சமயங்களில்
தனிமையை ரசிக்க
யாருமில்லாமற் போன போது
தனியாகவே
காத்திருத்தல் ஆரம்பமாகிறது....

தனக்கு தோழமையாய்
மற்றுமொரு தனிமை வேண்டி!

பாதச்சுவடுகளும்... அர்ச்சனை பூக்களும்...


நந்தவனத்தின்
தரை முழுமையும்
அழகழகாய்
பரவிக்கிடந்தன....
போகன்வில்லா பூக்களும்
மஞ்சள் நிற அரளியும்
வெள்ளை செம்பருத்தியும்....


பூக்களுக்கு இடையூன்றி
தன் பாதம் படாதவாறு
பூனை நடைபயின்று
இரு செம்பருத்திகளை
சாமிப்படத்திற்கென
பறித்து சென்றாள்
வீட்டுக்கார சிறுமி!

உதிர்ந்த மலரிதழ்களுக்கு ஊடாய்
பதிந்து கிடந்த - அவள்தம்
குட்டி பாதச்சுவடுகளை
தம் பூக்களால்
அர்ச்சித்துக் கொண்டிருந்தன
நந்தவனச்செடிகள் - அன்றைய
நாள் முழுவதும்!

செக்கு மாடு


தீபாவளிக்கு
எண்ணெய் தேய்த்து
குளிக்காவிடில்
அடு்த்த பிறவியில்
கடவுள்,
"செக்குமாடாய் பிறக்க வைப்பார்"
என்பாள் அம்மா அடிக்கடி....

கிராமத்தில்
செக்குமாட்டை
பார்க்கும் போதெல்லாம்
மிகவும் வருந்துகிறேன்....

சென்ற பிறவியில்
தீபாவளிக்கு
எண்ணெய் தேய்த்து
குளித்திருக்காதோ?
அந்த செக்கு மாடு!

கவி மாயாவி.

படம் நன்றி
http://marakkanambala.blogspot.com/2007/01/blog-post.html