Friday, November 12, 2010

கண்ணாடி தொட்டியில் கடல் மீன்கள்

வண்ணமிகு நிறங்கள்
கண்ணாடி கூண்டிற்குள்
தேர்ந்த கற்கள்
ஒளி மிகா வெளிச்சங்கள்...
வேளைக்கு உணவு...
இன்ன பிற வசதிகளுடன்
நீரில் கரையும் பிராண வாயு

பாதி வளைந்த பானையில்
வரைய இயலா
வண்ணக்கோடுகளாய்
வளைய வரும் வண்ணமீன்கள்
மேல்கீழாய், வலமிடமாய்
நீந்தி செல்கின்றன....

அவை
தன் மீது படிந்த
வண்ணங்களை - அதன்
நிழல் படிமங்களாகவே
எண்ணி நீந்துகின்றன...

கண்களில் எழும்
கேள்விக்குறிகளைத்
தவிர்க்க இயலாமல்
குனிந்த தலையுடன்
பார்க்கிறான்
அதனை ரசிப்பவன்...

இணை இழந்த
மீனின் அழுகையொலியால் எழும்
பக்ககச்சுவர்களின்
அதிர்வுகளையும் கேட்கிறான்...

மீனின் குறிக்கோளற்ற
நெடும்பயணச்சுற்றுப்பாதையும்
கூர்நோக்குகிறான்,
தெளிவாகவே....

ஆனால்,
இன்னும் அவனறிய
இயலவில்லை நீந்துதல்
அவற்றின் தொழில் அல்ல
இடையறா வாழ்க்கை போராட்டம் என்று!

Sunday, November 7, 2010

தனிமைகளின் கூட்டம்


குழந்தைகளின் கிறுக்கள்கள்
ஏதுமற்ற சுவர்.....

பார்வையாளர்கள் எவருமற்ற
விளையாட்டு அரங்கு....

பறவைகள் ஓசையற்ற
பூந்தோட்டம்....

ரசிக்க எவருமற்ற
மழைக்கால வானவில்....

நட்சத்திர கூட்டம்
இல்லாமல் போன வானம்...

சமயங்களில்
தனிமையை ரசிக்க
யாருமில்லாமற் போன போது
தனியாகவே
காத்திருத்தல் ஆரம்பமாகிறது....

தனக்கு தோழமையாய்
மற்றுமொரு தனிமை வேண்டி!

பாதச்சுவடுகளும்... அர்ச்சனை பூக்களும்...


நந்தவனத்தின்
தரை முழுமையும்
அழகழகாய்
பரவிக்கிடந்தன....
போகன்வில்லா பூக்களும்
மஞ்சள் நிற அரளியும்
வெள்ளை செம்பருத்தியும்....


பூக்களுக்கு இடையூன்றி
தன் பாதம் படாதவாறு
பூனை நடைபயின்று
இரு செம்பருத்திகளை
சாமிப்படத்திற்கென
பறித்து சென்றாள்
வீட்டுக்கார சிறுமி!

உதிர்ந்த மலரிதழ்களுக்கு ஊடாய்
பதிந்து கிடந்த - அவள்தம்
குட்டி பாதச்சுவடுகளை
தம் பூக்களால்
அர்ச்சித்துக் கொண்டிருந்தன
நந்தவனச்செடிகள் - அன்றைய
நாள் முழுவதும்!

செக்கு மாடு


தீபாவளிக்கு
எண்ணெய் தேய்த்து
குளிக்காவிடில்
அடு்த்த பிறவியில்
கடவுள்,
"செக்குமாடாய் பிறக்க வைப்பார்"
என்பாள் அம்மா அடிக்கடி....

கிராமத்தில்
செக்குமாட்டை
பார்க்கும் போதெல்லாம்
மிகவும் வருந்துகிறேன்....

சென்ற பிறவியில்
தீபாவளிக்கு
எண்ணெய் தேய்த்து
குளித்திருக்காதோ?
அந்த செக்கு மாடு!

கவி மாயாவி.

படம் நன்றி
http://marakkanambala.blogspot.com/2007/01/blog-post.html

Wednesday, September 22, 2010

துயர் பாஷை



மிக அழகான கூண்டில்
உணவு... தண்ணீருடன்..
அடைக்கப்பட்டிருந்தது
அந்தக்கிளி
அலகில் சிவப்பும்
உடலில் பச்சையும் பூசிக்கொண்டு
போவோர் வருவோர்
எல்லோரையும்
தன் கீச்சுக்குரலில்
இடைவிடாது விளிக்கிறது....

ஒருவேளை
கிளியின் பாஷையில்
அதன் துயர்பகிர
தேர்ந்த சொற்கள்
இல்லாதிருக்கவும் கூடும்.

கவிமாயாவி

Friday, August 13, 2010

அடைக்கலம்

மழைக்கு கூட
ஒதுங்காதவர்கள்
மழை வெள்ளத்திற்கு
அடைக்கலமாய்
பள்ளிக்கூடத்தில்!

சுதந்திரம்?

இன்று தான்
காசு கொடுத்து வாங்கினேன்
கூண்டு பறவையொன்றின்
சுதந்திரத்தை!
நாளை சுதந்திரதினமாம்!

Thursday, August 12, 2010

பருவம்

இலையை சருகாக்கி
சருகை இலையாக்கி
தன்னுடன் கொண்டு செல்ல
காத்திருக்கிறது காற்று!

ஆனால்...

பறவைக்கு ஈடின்றி
சருகாகவே உதிர்ந்து விடுகிறது
பனிக்காலத்தில்
உதிரும் இலையொன்று!

பட்டாம்பூச்சியின் பாதச்சுவடு

நூற்றுக்கணக்கான
மலர்களுக்கிடையே
ஈரிதழ் மட்டும்
சிறகு முளைத்து
பறந்து விட்டன
காற்றின் நேர்கோட்டு திசையில்
வண்ணங்கள் யாவும்
உதிர்த்து சென்ற
இதழ்களை
உற்று நோக்கும் போதுதான்
தெரிந்தது...
பட்டாம்பூச்சி
பறந்து சென்ற
பாதையின் சுவடு

சில நியதிகள்...

இயற்கை சிந்திய
வண்ணங்களை யொடுக்கி
வானவில்லொன்று செய்தேன்
கோடை நாளொன்றின்
இறுதிப்பொழுதில்
பூமிக்கொன்றும்...
ஆகாயத்திற்கொன்றுமாய்
விட்டம் வளைந்த
வானவில்
சில நியதிகளுக்குட்பட்டு
இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது
மழை நாளொன்றுக்காக...

சில்லறை சப்தம்

வயிற்றுப்பசிக்காக
பார்வையற்ற ஒருவனஅ
பாடும் பாடலொன்றின்
சுருதி, லயம் இரண்டையுமே
அவ்வப்போது
சரி செய்து கொண்டிருக்கிறது
இடை இடையே
தட்டில் விழும்
சில்லறை சப்தங்கள்!

குமுதத்தில் பிரசுரமான எனது கவிதை

நிழல்... நீ... மரம்..

இலைகளை மட்டுமே
உதிர்த்து பழகிய மரம்
பூக்களையும் கூட
உதிர்க்க முயற்சிக்கலாம்
நிழலுக்காக நீ
ஒதுங்கும் போது!

அரூபமாய்... சில மரங்கள்

புகலிடம்
தேடியழைந்த சிட்டுக்குருவிக்கு
என் வீட்டு பரணில்
அமைந்ததோர் வாழிடம்
இரண்டு வெண்கல பாத்திரங்கள்,
பழைய புத்தக மூட்டைகள்
மரச்சாமான்கள்
என அனைத்தையும் தாண்டி
வேரிடுகிறது
இலை, கிளை ஏதுமின்றி
அரூபமாய் ஒரு மரம்!

ஆனந்த விகடனில் பிரசுரமான எனது கவிதை

சில்லறை பிரச்சனஐ

பிச்சைக்காக கையேந்தியவனிடம்
"சில்லறை இல்லை"
என்றபோது தான்
நினைவுக்கு வந்தது
நடத்துனரிடம்
இழந்துவிட்ட
மீதிச்சில்லறையின்
ஞாபகம்!

ஒற்றைச்சிறகு

கடவுச்சீட்டில்லை...
மொழியறிவுமில்லை...
பிறகெப்படி
கண்டம் கடக்கின்றன
இந்தப்பறவைகள்...
மனதெழுப்பிய கேள்விகளுக்கு
விடையாய்
தன் ஒற்றைச்சிறகை
உதிர்த்து சென்றது
புலம் பெயரும் பறவையொன்று!
பதிலை பத்திரமாய்
பாதுகாத்துக்கொண்டிருக்கிறது
என் மனம்

மனப்பறவை

கீழ்திசை நகரும்
மேகமொன்று...
கீழ்திசை பறக்கும்
பறவையொன்று...
அவற்றின் வேகம்
ஈடுதந்து நகரும்
நதியொன்று...

மூன்றுமே அறிவதில்லை
நான்காவதாய்
மூன்றின் பின் தொடரும்
என் மனப்பறவையை!

நாட்குறிப்பு

மலர் செடியொன்று
நீ உதிர்த்த
புன்னகைக்கு ஈடாய்
தன் மலரை உதிர்த்து
கடன் தீர்த்து கொண்டது!

மலரை நீ சூடிக்கொண்ட போது
உன் புன்னகையை மலர்
சூடிக்கொண்டது!

எது பேரழகென
விவரிக்கமுடியாமல்
வெட்கிக்கொண்டது
காற்று!

அன்றைய தினம்
அழகான தினமென்று
தன் நாட்குறிப்பில்
குறித்துக்கொண்டது
நிகழ்காலம்!